Monday, 2 June 2025

தொல்காப்பியத்தின் காலம்!

தொல்காப்பியத்தின் காலம்!

கிடைத்துள்ள தமிழ் இலக்கண நூல்களில் தொன்மையானது தொல்காப்பியம் ஆகும். நூலின் பெயரால் நூலாசிரியரின் பெயர் வழங்கப்படுவதும் இந்நூலுக்கு உரிய சிறப்பாகும்.

தொல்காப்பியத்தைத் தொல்காப்பியர் நிலம்தரு திருவின் பாண்டியன் அவையில் அரங்கேற்றினார். அவ்வவையின் அவைத்தலைவராக இருந்தவர் அதங்கோட்டாசான் ஆவார்.

தொல்காப்பியம் இயற்றப்பட்டு அரங்கேற்றப்பட்ட காலம் குறித்த தமிழறிஞர்களின் கருத்துகளை இங்கு ஆராய்வோம்.

“இலக்கியம் இன்றேல் இலக்கணம் இன்றே

எள்ளின் றாகில் எண்ணெயும் இன்றே”

என்கிற பன்னிருப்படலப் பாயிரத்தின்படி இலக்கிய நூல்கள் பல தோன்றிய பிறகே இலக்கண நூல்கள் தோன்ற இயலும் என்பதால், தொல்காப்பியத்திற்கு முன்பே பல இலக்கிய நூல்கள் இருந்திருக்க வேண்டும்.

தொல்காப்பியத்திற்கு முன்னர் அகத்தியம் எனும் தமிழ் இலக்கண நூல் இருந்துள்ளது.

“ஆனாப் பெருமை அகத்தியன் என்னும்

அருந்தவ முனிவன் ஆக்கிய முதல் நூல்”

எனும் பன்னிருப்படலப் பாயிரத்தின் வரிகள் தொல்காப்பியத்திற்கு முன்பு அகத்தியம் எனும் இலக்கண நூல் இருந்ததைக் காட்டுகின்றன. அத்துடன் தொல்காப்பியர் அகத்தியரின் மாணவர் என்கிற கருத்தும் உண்டு.

இராமாயணத்தில் கம்பர் குறிப்பிடும் “தென்தமிழ் நாட்டகன் பொதியில் திருமுனிவன் தமிழ்ச்சங்கம்” எனும் செய்தியும், அகத்திய முனிவரின் தமிழ்ச் சங்கம் குறித்து வால்மீகி ராமாயணத்தில் இடம் பெறும் செய்தியும் அகத்தியம் இருந்ததற்கான உண்மைக்கு மேலும் சான்றுகள் பகர்வதாக உள்ளன.

சிவபெருமான் தமிழை அகத்தியருக்கும், வடமொழியைப் பாணினிக்கும் அருளியதாக வழங்கப்படும் தொன்ம வழக்கும் உண்டு.

சங்கக் காலத்தில் எழுந்த நூலே தொல்காப்பியம். அது எச்சங்கக் காலம் என்பதே இங்கு விடை காணப்பட வேண்டிய கேள்வியாகும்.

மூன்று தமிழ்ச் சங்கங்கள் இருந்ததாக இறையனார் களவியல் உரை குறிப்பிடுகிறது. முதல் சங்கம் தென்மதுரையிலும், இடைச்சங்கம் கபாடபுரத்திலும், கடைச்சங்கம் மதுரையிலும் விளங்கின. இவற்றுள் முதலிரண்டு சங்கங்கள் கடற்கோளினால் அழிந்து போயின.

முதல் சங்கக் காலத்தில் அகத்தியம் தோன்றியது என்றும் இடைச்சங்கக் காலத்தில் தொல்காப்பியம் தோன்றியதென்றும் தமிழறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். அவர்கள் குறிப்பிடுவதற்குச் சான்றாகக் கடைச்சங்க நூல்களான சங்க இலக்கியங்கள் அமைகின்றன.

தொல்காப்பிய காலத்தில் சகரம் மற்றும் யகரம் மொழி முதல் வராது என வழக்குகள் இருந்தன.

கடைச் சங்க காலத்து நூல்களாகக் குறிப்பிடப்படும் சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டில் சடை, சமம், சகடம் ஆகிய சொற்களில் சகரம் மொழி முதல் அமைவதைக் காணலாம். யவனர் என்ற சொல்லில் யகரம் மொழி முதல் அமைகிறது.

இவ்விதம் தொல்காப்பிய வழக்குகள் கடைச்சங்க நூல்களான சங்க இலக்கியங்களில் மீறப்பட்டிருப்பதைக் கொண்டு கடைச்சங்கத்துக்கு முந்தைய இடைச்சங்கக் காலத்தில் தொல்காப்பியம் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்குத் தமிழறிஞர்கள் வருகின்றனர்.

அது மட்டுமல்லாது தொல்காப்பியத்தில் நூறாயிரம் வரையிலான எண்களே உள்ளன. எட்டுத்தொகையிலும் பத்துப்பாட்டிலும் கோடி, நெய்தல், குவளை, ஆம்பல், சங்கம், தாமரை, வெள்ளம் என நூறாயிரத்தைக் கடந்த எண்கள் குறிப்பிடப்படுகின்றன. இதைக் கொண்டும் கடைச்சங்கக் காலத்துக்கு முந்திய இடைச்சங்கக் காலத்து நூலே தொல்காப்பியம் என்ற முடிவைத் தமிழாய்வாளர்கள் எட்டுகின்றனர். அதன்படி இடைச்சங்கக் காலத்தில் கி.மு நான்காம் நூற்றாண்டு காலத்தே தொல்காப்பியம் யாக்கப்பட்டுள்ளது என்பது தமிழறிஞர்களின் துணிபாகும்.

*****

Sunday, 1 June 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (02.06.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (02.06.2025)

1) தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முகக்கவசம் அணிவது கட்டாயம் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

2) புதிய பேருந்து பயண அட்டை வழங்கப்படும் வரை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பழைய பேருந்து பயண அட்டையைப் பயன்படுத்தி இலவசமாகப் பயணிக்கலாம்.

3) கடந்த மே மாதம் அரசுப் பணிகளில் இருந்து 8144 அரசுப் பணியாளர்கள் ஓய்வு பெற்றுள்ளனர்.

4) தமிழகத்தில் கோடை மழை இயல்பை விட 97 சதவீதம் அதிகம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

5) தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே மே 24 ஆம் தேதி அன்று துவங்கியது. இதைத் தொடர்ந்து கேரளத்தில் பெய்து வரும் கனமழையால் அம்மாநிலம் வெள்ளத்தில் மிதக்கிறது.

6) 2025 ஆம் ஆண்டிற்கான உலக அழகியாக இந்தியாவின் நந்தினி குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Education & GK News

1) The Health Department has said that wearing a face mask is mandatory as the spread of Corona is increasing in Tamil Nadu.

2) School and college students can travel free of cost using their old bus travel cards until a new bus travel card is issued.

3) 8144 government employees retired from government services last May.

4) The Meteorological Department has said that summer rainfall in Tamil Nadu is 97 percent more than normal.

5) The southwest monsoon started early on May 24. Following this, the Kerala is facing floods due to heavy rains.

6) India's Nandini Gupta has been selected as Miss World 2025.

Saturday, 31 May 2025

உலக அனுபவம் சொல்லும் உன்ன மொழிகள்!

உலக அனுபவம் சொல்லும் உன்ன மொழிகள்!

பணம் ஒரு தடையே அல்ல. ஒரு யோசனை கூட தோன்றாமல் இருப்பதுதான் மாபெரும் தடை.

-          கென் ஹகுடா

 

உங்கள் பணத்தை இரட்டிப்பாக்க வழி அதை மடித்து பைக்குள் வையுங்கள் என்பதுதான். (அநாவசியமாகப் பணத்தைப் பையிலிருந்து எடுத்து செலவழிக்காதீர்கள்)

-          கிம் ஹப்பார்ட்

 

பாதை எங்கெல்லாம் போகிறதோ, அங்கெல்லாம் போகாதீர்கள். எங்கே பாதை இல்லையோ அங்கு செல்லுங்கள். பாதையை உருவாக்குங்கள்.

-          எமர்சன்

 

கையில் பணமில்லாத நிலை நம் சுயமரியாதையை குழைத்து விடும். சம்பாதிப்பது மேன்மையானவர், கண்ணியமானவர் என்ற புகழைத் தானே கொண்டு வரும்.

-          ஜான் சோபோரிக்

 

நீங்கள் சம்பாதிக்கும் பணம்தான் உங்களைப் பற்றி நீங்கள் உருவாக்கி வைத்திருக்கும் மதிப்பின் அடையாளம்.

-          இடாவு கோயெனிக்கன்

 

நாம் செய்யும் ஒவ்வொரு முயற்சியும் அதிலுள்ள பிரச்சனைகளையும் சவால்களையும் கண்டறிவதற்கும் கற்றுக் கொள்வதற்கும் வாய்ப்பு.

-          டேவிட் ராக்வெல்

 

நிறைய பணத்தை வைத்துக் கொண்டு ஏழையாக வாழ விரும்புகிறேன்.

-          பிக்காஸோ

 

உங்களின் மிகப் பெரிய சொத்து உங்களின் சம்பாதிக்கும் திறன்.

-          பிரெய்ன் டிரேசி

 

கால்பந்தை விட ஒப்பந்தங்கள் மூலம் அதிகம் சம்பாதிக்கிறேன்.

-          பீலே

 

முதலீடு பணத்தை வேலை வாங்குகிறது. பணத்தைப் பாதுகாக்க ஒரே வழி அதை முதலீடு செய்வதுதான்.

-          கிரேன்ட் கார்டோனே

 

மிகச் சிறந்த பழிவாங்கல் என்பது மகத்தான வெற்றி பெறுவதுதான்.

-          பிரான்க் சினாட்ரா

 

மனிதர்கள் அவர்களுக்குத் தேவையானதை அரிதாகவே வாங்குகிறார்கள். அவர்களுக்கு விருப்பமானத்தைத்தான் எப்போதும் வாங்குகிறார்கள்.

-          சேத் கோடின்

 

நீங்கள் வெற்றி பெறுவது தற்செயலாக நடந்து விடாது. முன் தயாரிப்புகள் இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.

-          ரோஜர் மாரிஸ்

 

பேசுவதற்கு முன் கவனியுங்கள். எழுதுவதற்கு முன் யோசியுங்கள். முதலீடு செய்வதற்கு முன் ஆராயுங்கள். விமர்சனம் செய்வதற்கு முன் காத்திருங்கள். விடுவதற்கு முன்பு முயன்று பாருங்கள். ஓய்வுக்கு முன் சேமித்து விடுங்கள்.

-          வில்லியம் ஆர்தர்வார்டு

 

ஓர் யோசனையின் மதிப்பு அதைப் பயன்படுத்துவதில்தான் இருக்கிறது.

-          எடிசன்

 

வெற்றியின் சுவையைக் கூட்டும் ஒரு சுவைதான் தோல்வி.

-          ட்ரூமேன் கபோட்

 

வியாபாரம் என்பது விளையாட்டும் போரும் கலந்த ஒரு கலவை.

-          ஆன்ட்ரே மௌரேய்ஸ்

*****

Friday, 30 May 2025

இந்தியாவின் வண்ண நகரங்களை அறிந்து கொள்வோமா?

இந்தியாவின் வண்ண நகரங்களை அறிந்து கொள்வோமா?

இந்தியாவில் மஞ்சள் நகரம் (தங்க நகரம்), நீல நகரம், இளஞ்சிவப்பு நகரம், வெள்ளை நகரம், சிவப்பு நகரம், ஆரஞ்சு நகரம் என நிறங்களை அடிப்படையாகக் கொண்ட நகரங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி அறிந்து கொள்வோமா?

1. மஞ்சள் நகரம் அல்லது தங்க நகரம்

தங்க நகரம் என அழைக்கப்படுவது ஜெய்சால்மர். இது ராஜாஸ்தானில் உள்ளது. இந்நகரின் கோட்டைகள், அரண்மனைகள், மணல் முகடுகள், ஏரிகள் போன்றவை சூரிய ஒளியில் தங்க நிறமாக ஜொலிக்கின்றன. இந்நகரை நிறுவியர் ராவ் ஜெய்சால். அவரது நினைவாக இந்நகரம் ஜெய்சால்மர் எனப்படுகிறது.

2. நீலநகரம்

நீல நகரம் என அழைக்கப்படுவது ஜோத்பூர். இந்நகரமும் ராஜஸ்தானில்தான் உள்ளது. இந்நகரின் வீடுகள், மதில்கள் அனைத்துக்கும் நீல நிறமே அடிக்கப்படுகின்றன. இந்நகரில்தான் இந்திய ராணுவத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைந்துள்ளது.

3. இளஞ்சிவப்பு நிறம்

இளஞ்சிவப்பு நிறம் என அழைக்கப்படுவது ஜெய்ப்பூர். இந்நகரமும் ராஜஸ்தானில்தான் உள்ளது. இந்நகரமே ராஜஸ்தானின் தலைநகரமும் ஆகும். இந்நகரில் உள்ள கோட்டைகள், அரண்மனைகள் இளஞ்சிவப்பு நிறத்தில் ஜொலிப்பதால் இந்நகருக்கு இப்படி ஒரு பெயர்.

4. வெள்ளை நகரம்

வெள்ளை நகரம் என அழைக்கப்படுவது உதய்பூர். இந்நகரமும் ராஜஸ்தானில்தான் உள்ளது. இந்நகரை நிர்மாணித்தவர் உதய்சிங். அவரது பெயரால் இந்நகரம் வழங்கப்படுகிறது. இந்நகரம் ஏரிகளின் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்நகரின் அரண்மனைகள், கோட்டைகள் வெள்ளை நிறத்தில் காட்சியளிப்பதால் இந்நகருக்கு இப்படி ஒரு பெயர்.

5. சிவப்பு நகரம்

சிவப்பு நகரம் என அழைக்கப்படுவது ஆக்ரா. இது உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ளது. இந்நகரின் பெரும்பாலான அரண்மனைகள், கோட்டைகள் சிவப்பு நிறத்தில் உள்ளதால் இப்படி ஒரு பெயர். ஆனால் தாஜ்மஹால், பதேபூர் சிக்ரி, சிக்கந்திரா போன்றவை வெள்ளை நிறத்திலானவை.

6. ஆரஞ்சு நகரம்

ஆரஞ்சு நகரம் என அழைக்கப்படுவது நாக்பூர். இது மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ளது. ஆரஞ்சுகள் அதிகம் விளைவதால் இந்நகரத்திற்கு இப்படி ஒரு பெயர். மேலும் இந்நகரில் உள்ள அரசு கட்டடங்களும் பொது கட்டடங்களும் ஆரஞ்சு வண்ணத்தில் உள்ளன.

இந்தியாவில் உள்ள வண்ண நகரங்களில் பெரும்பாலானவை ராஜஸ்தானில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சிவப்பு நகரமும், ஆரஞ்சு நகரமும் மட்டுமே வேறு மாநிலங்களில் உள்ளன.

*****

Thursday, 29 May 2025

இப்படிப் படித்துப் பாருங்கள்!

இப்படிப் படித்துப் பாருங்கள்! எப்படி இருக்கிறது என்ற கூறுங்கள்!

எப்படி படிக்க வேண்டுமோ அப்படிப் படித்தால் படிக்கும் அனுபவம் இனிமையாகவும் மதிப்பெண்களை அள்ளித் தருவதாகவும் இருக்கும். அதற்கு எப்படிப் படிக்க வேண்டும்? இப்படிப் படித்தால் நீங்கள் ஒருமுறை படித்தாலும் பலமுறைப் படித்ததற்குச் சமம். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால்,

1. சத்தமிட்டுப் படியுங்கள்

சத்தமிட்டுப் படிக்கும் போது உங்கள் வாய், கண், காது ஆகிய மூன்று புலன்களும் இயங்குகின்றன. மனதுக்குள் படிக்கும் போது உங்கள் கண் என்கிற ஒரு புலன் மட்டுமே இயங்குகிறது. அதிகப் புலன்கள் இயங்கும் போது உங்கள் கவனம் கூடுதலாகிறது. மனமும் ஒருநிலைப்படுகிறது. சத்தமிட்டுப் படிப்பது உங்கள் நினைவில் பதிய ஏதுவாகிறது. மேலும் சத்தமிட்டுப் படிப்பது உங்கள் நீண்ட கால நினைவில் சேகரமாகிறது. மனதுக்குள் படிப்பது குறுகிய கால நினைவில் சேகரமாகிறது.

2. பாடங்களைப் படங்கள் ஆக்குங்கள்

நீங்கள் படிப்பது எழுத்துகளாக உள்ளன. எழுத்துகளாக நீங்கள் படிப்பதைப் படங்களாக மாற்றுங்கள். மூளையானது நினைவுகளைப் படங்களாகவே பதிவு செய்து கொள்கிறது. எழுத்துகளை நினைவில் கொள்வதை விட படங்களை நினைவில் கொள்வது எளிது. ஒரு சிறுநீரகத்தைப் பற்றிப் படிப்பதை விட, அதை நீங்கள் படம் வரைந்து பாகங்கள் குறித்துப் பார்த்து விட்டால் உங்களால் சிறுநீரகத்தை எப்போதும் மறக்க முடியாது.

3. மனதுக்குள் ஓட்டிப் பாருங்கள்

நீங்கள் அரை மணி நேரம் படித்தால் ஐந்து நிமிடம் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். அடுத்த ஐந்து நிமிட ஓய்வில் அரை மணி நேரத்தில் என்ன படித்தீர்கள் என்பதை மனதில் ஓட்டிப் பாருங்கள். இப்படிச் செய்தால் நீங்கள் படித்தது எப்போதும் மறக்காது.

4. விளக்கிச் சொல்லிப் பாருங்கள்

நீங்கள் படித்ததை மற்றவர்களுக்கு விளக்கிச் சொல்ல முடிகிறதா எனப் பாருங்கள். அப்படிச் சொல்ல முடிந்தால் நீங்கள் கற்றது உங்களுக்கு எப்போதும் மறக்காது. ஒருவேளை அப்படி விளக்கிச் சொல்ல யாரும் கிடைக்கவில்லை என்றால், உங்களுக்கு நீங்களே விளக்கிச் சொல்லிப் பாருங்கள்.

5. குறிப்புகள் எடுத்துக் கொள்ளுங்கள்

பல பக்கங்களில் நீங்கள் படித்ததைச் சில பக்கங்களில் குறிப்புகளாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள். தேர்வுகளுக்கு நீங்கள் தயாராகும் போது பல பக்கங்களைச் சில மணி நேரங்களில் படித்து விட முடியாது. அப்போது சில பக்கங்களில் நீங்கள் எழுதிய குறிப்புகளைப் பார்ப்பது பல பக்கங்களைப் படித்துப் பார்த்தற்கான நினைவையும் நிறைவையும் தரும். இது தேர்வைத் தன்னம்பிக்கையோடும் படித்தவற்றை நினைவில் கொண்டு வந்து  திறம்பட எழுதவும் உங்களுக்கு உதவும்.

இந்த ஐந்து முறைகளில் படித்துப் பாருங்கள். படிப்பில் நீங்கள் முதலிடத்தில் இருப்பீர்கள். படிப்பில் எப்போதும் நீங்கள் முதலிடத்தில் இருக்க வாழ்த்துகள்!

*****

Monday, 26 May 2025

நாம் ஏன் ரத்தன் டாடாவை நினைவு கூர வேண்டும்?

நாம் ஏன் ரத்தன் டாடாவை நினைவு கூர வேண்டும்?

அவமானங்கள், தோல்விகள் யாருக்கு இல்லை. நான் மட்டும் டாடா, பிர்லாவாக இருந்திருந்தால் அவமானங்கள், தோல்விகள் இல்லாமல் எப்படி சாதித்திருப்பேன் என்று சொல்கிறீர்களா? டாடாவுக்கே அவமானங்களும் தோல்விகளும் இருந்திருக்கின்றன. அதையெல்லாம் கடந்து சாதனை படைத்தவர்தான் ரத்தன் டாடா.

யார் இந்த ரத்தன் டாடா?

டாடா நிறுவனத்தை உருவாக்கிய ஜாம்ஷெட்ஜியின் பிள்ளைகள் இருவருக்கும் வாரிசுகள் இல்லை. அவரது இரண்டாவது மகன் ரத்தன் மறைந்த போது அவர் மனைவி நவாஜ்பாய் தத்தெடுத்து வளர்த்த நேவல் டாடாவுக்குப் பிறந்தவர்தான் ரத்தன் டாடா.

டாடாவுக்கும் பிரச்சனைகள் இருந்தன

10 வயதில் பெற்றோர்கள் பிரிந்ததால் பாட்டியிடம் வளர்ந்தவர் ரத்தன் டாடா. கூச்ச சுபாவம் உள்ளவர். தன்னம்பிக்கை இல்லாத இளைஞனாக இருந்தவர். காதல் வாழ்விலும் தோல்வியுற்றவர். பாட்டியின் அழைப்பால் இந்தியா வந்தவர். அப்போது ஜே.ஆர்.டி டாடாவின் பொறுப்பில் டாடா நிறுவனங்கள் இருந்தன.

ஜே.ஆர்.டி டாடா ரத்தனுக்கு எந்தப் பொறுப்பும் கொடுக்காமல் டாடா ஸ்டீல் நிறுவனத்தில் எட்டு ஆண்டுகள் ஏதேதோ வேலைகளைக் கொடுத்தார். ஜே.ஆர்.டி. டாடாவுக்கும் ரத்தனுக்கும் ஒத்துப் போகவில்லை என்பது நிறுவனத்தில் எல்லாருக்கும் தெரிந்த ரகசியமாக இருந்தது. ஜே.ஆர்.டி. டாடா மனம் மாறி நிறுவனத்தை ரத்தனிடம் ஒப்படைத்த போது அவருக்கு வயது 53.

டாடாவுக்கும் நட்டம் ஏற்படும்

ரத்தன் டாடாவின் முக்கியமான சாதனை டாடா நிறுவனத்தைச் சர்வதேச நிறுவனமாக மாற்றியது. இதற்காக அவர் வெளிநாட்டு நிறுவனங்கள் பலவற்றை வாங்கினார். அதனால் ஒரு கட்டத்தில் டாடா நிறுவனமே நட்டத்தில் தடுமாறியது. ஆனால் ரத்தன் டாடா ஓய்வு பெற்ற போது சரிபாதி டாடா நிறுவனத்தின் வருமானம் வெளிநாடுகளிலிருந்து வந்தது.

டாடாவுக்கும் அவமானங்கள் நேர்கின்றன

ஒரு கட்டத்தில் டாடாவின் மகிழ்வுந்து தயாரிப்பு பிரிவு (கார் பிரிவு) நட்டத்தில் தள்ளாடியது. அதனால் டாடாவின் மகிழ்வுந்து பிரிவைப் போர்டு நிறுவனத்துக்கு விற்கப் போய் அவமானப்பட்டார் ரத்தன் டாடா. ஆனால் காலம் அப்படியே போய் விடுமா? பொறுமையோடு முயற்சியைக் கைவிடாதோருக்குக் காலம் கை கொடுக்கும் அல்லவா! பின்னாட்களில் போர்டு நிறுவனம் நட்டத்தில் தவித்த போது அவர்களின் ஜாகுவார், லேண்ட் ரோவர் பிராண்டுகளை வாங்கினார் ரத்தன் டாடா.

நம்பகத்தன்மையைக் கைவிட முடியாது

ஜப்பானில் இருக்கும் டோகோமா நிறுவனத்துடன் தொலைதொடர்பு துறையில் இறங்கிய டாடா நிறுவனம் அதில் நட்டத்தைச் சந்தித்த போதும் அந்த நிறுவனத்துக்குத் தர வேண்டிய இழப்பீட்டை முறையாகத் தந்தவர் ரத்தன் டாடா. ஆனால் அந்த இழப்பீட்டைத் தரக் கூடாது என மறுத்தவர் சைரஸ் மிஸ்ட்ரி. இதற்காக நிறுவனத்திலிருந்து சைரஸ் மிஸ்ட்ரியையும் தூக்கி அடிக்க தயங்கவில்லை ரத்தன் டாடா. நட்டம் வருகிறது என்பதற்காக நம்பகத்தன்மையைக் கைவிட முடியாது என்பது அவரது நிலைபாடு.

எளிமையின் சொந்தக்காரர்

டாடா, பிர்லா இந்தியாவின் பணக்காரர்கள் என்பது நாடறிந்த உண்மை. ரத்தன் டாடாவிடம் பணக்காரத்தனத்தையோ, பகட்டுத்தனத்தையோ பார்க்க முடியாது. அவர் எளிமையின் அடையாளம். அவரைச் சுற்றி பெரிய பரிவாரங்களைப் பார்க்க முடியாது. மும்பையிலிருந்து டெல்லி செல்லும் போது அவர் தனது கைப்பையைத் தூக்கிக் கொண்டு தனியாகத்தான் விமானம் ஏறுவார். அவர் வீட்டு வாசலில் கூட கடும் பாதுகாப்பு இருக்காது.

ஏன் ரத்தன் டாடா நினைவுகூரப்படுகிறார்?

ஒரு முடிவை எடுத்துச் செயல்படுத்தும் போது அது சரியாகவும் அமையலாம். தவறாகவும் போகலாம். தவறாகப் போகும் போது அதைச் சரியானதாக மாற்றும் வேலையைச் செய்ய வேண்டும் என்பது ரத்தன் டாடாவின் கொள்கை. அதை அப்படிச் செய்தும் காட்டியவர் அவர். அதற்காகத்தான ரத்தன் டாடா தற்போதும் நினைவு கூரப்படுகிறார்.

உங்களுக்குப் பிடித்திருந்தால் நீங்கள் ரத்தன் டாடாவின் குணங்களை உங்கள் வாழ்வில் பிரதியெடுத்துக் கொள்ளலாம். நல்ல குணங்களை நம் வாழ்வில் பிரதியெடுப்பதன் மூலமாக இந்த உலகிற்கு நாமும் நல்லவராக வாய்ப்புகள் இருக்கின்றனதானே!

*****

Sunday, 25 May 2025

சிறப்பாகப் படிப்பதற்கான 5 குறிப்புகள்

சிறப்பாகப் படிப்பதற்கான 5 குறிப்புகள்

பள்ளிக்கூடம் துவங்க உள்ள நிலையில் யாருக்குத்தான் சிறப்பாகப் படிக்க ஆசை இருக்காது? அந்த ஆசை நிறைவேற கடினமாக உழைப்பது முக்கியமெனினும் நுட்பமும் நுணுக்கமும் தெரிந்து படிப்பது அதை விட முக்கியமானது. உங்களுக்குப் படிப்பில் பயன்படும் முக்கிய நுணுக்கங்களும் நுட்பங்களும் இதோ!

1. முக்கிய சொற்கள்

நீங்கள் நான்கு பக்கங்கள் படித்தாலும், நாற்பது பக்கங்கள் படித்தாலும் அப்பக்கங்களில் இடம் பெற்றுள்ளவற்றை ஐந்தாறு முக்கிய சொற்களில் அடக்கி விட முடியும். அந்த முக்கிய சொற்களைக் குறிப்புகளாக எழுதிக் கொள்ளுங்கள்.

2. சிறியதே சிறப்பு

எவ்வளவு பெரிய பத்தியானாலும் அது ஒவ்வொரு வாக்கியங்களால் ஆனதே. எத்தனை பக்கங்கள் என்றாலும் அவை ஒவ்வொரு பத்தியால் ஆனதே. எவ்வளவு பெரியதாக ஒரு புத்தகம் இருந்தாலும் அது ஒவ்வொரு பக்கங்களால் ஆனதே. ஆகவே நீங்கள் எவ்வளவு பெரிய பகுதியைப் படிப்பதாக இருந்தாலும் அதைச் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு படியுங்கள். சிறு சிறு பகுதிளாகப் பிரித்துக் கொண்டு படிக்கும் போது அது உங்களை எளிமையாக உணர வைக்கும். சிறிது சிறிதாகப் படிக்க ஆரம்பித்து நீங்கள் ஒரு பெரிய பகுதியைப் படித்து முடித்திருப்பீர்கள்.

3. அவ்வபோது மீள்பார்வை

 ஒரு மரக்கன்றை நட்டு விடுவதாலேயே அது மரமாகி விடாது. அவ்வபோது அதைப் பார்க்க வேண்டும்; பராமரிக்க வேண்டும்; நீருற்ற வேண்டும். அது போல ஒரு முறை படித்து விடுவதாலேயே படிப்பது அப்படியே பச்சக்கென்று மூளையில் ஒட்டிக் கொண்டு விடாது. அவ்வபோது படித்ததை மீள்பார்வை செய்ய வேண்டும். இது தற்காலிக மறதிகளால் பாடப்பொருள் மறந்து போவதைத் தடுக்கும்.

4. தொடர்ச்சியாகப் படித்தல்

நீங்கள் ஒவ்வொரு நாளும் சிறிய அளவில் படித்திருக்கலாம். அது ஒரு பெரிய குறையில்லை. ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாகப் படிக்கும் அளவானது ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது மிகப்பெரிய அளவில் வளர்ந்திருக்கும். சிறுதுளி பெருவெள்ளம் ஆவது போல, சிறுக சிறுகத் தொடர்ந்து செய்தால் எவ்வளவு பெரிய பாடத்தையும் உங்களால் படித்து விட முடியும்.

5. மாறாத ஒழுக்கம்

தினமும் குறிப்பிட்ட நேரத்தில் படித்தல், குறிப்பிட்ட இடத்தில் அமர்ந்து படித்தல், படிப்பதற்குக் குறிப்பிட்ட முறையைப் பயன்படுத்துதல் போன்ற மாறாத பழக்கங்கள் உங்களால் எதையும் படிக்க முடியும் என்ற நம்பிக்கையை விதைக்கக் கூடியவை. அப்படி ஒரு தன்னம்பிக்கை உங்களுக்கு வந்து விட்டால் உங்களால் எதையும் படிக்க முடியும். இதற்கு அடிப்படை மாறாத ஒழுக்கமே. மாறாத ஒழுக்கத்தால் உங்கள் படிப்பில் ஒரு மாற்றத்தை உண்டு பண்ணி விட முடியும்.

நீங்கள் படிக்கும் போது மேற்படி நுட்பங்களையும் நுணுக்கங்களையும் இணைத்துக் கொண்டு உங்கள் கல்வியில் மாற்றத்தை உருவாக்கி முன்னேற்றத்தை அடைய வாழ்த்துகள்!

*****